தொண்டர்களை அடிக்க கை ஓங்கிய திருநாவுக்கரசர் ; காங்கிரஸ் போராட்டத்தில் தள்ளுமுள்ளு… திருச்சியில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 4:57 pm

அண்ணாமலை போரப்போக்கில் புழுதி வாரித் தூற்றக்கூடாது என்றும், முறையான ஆதாரங்களுடன் நிரூபித்து காட்ட வேண்டும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறிக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மறியல் போராட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும், நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி அதானி குழுமத்திற்கு விற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் / ரயில் மறியல் போன்றவை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக சுமார் 300-க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக கூடியிருந்த நிலையில் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டனம் முழக்கமிட்டனர். பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முன்வந்த போது காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்த வருபவர்கள் எல்லை தாண்டி வரக்கூடாது என்பதற்காக போடப்பட்டிருந்த ரோப்கயிரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை தள்ளி அழுத்தினர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் பின்னால் நின்ற உறுப்பினர்களை வேகமாக தள்ளி விட்டார். பின்னர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர் : ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன் அவருக்கான அலுவலகத்தை பறித்து இன்று அவரை பாரதிய ஜனதா கட்சி நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால், சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாக மக்கள் மன்றம் வாயிலாக நாங்கள் இதனை வெல்வோம். சர்வாதிகாரப் போக்கினை கையில் எடுத்துக்கொண்டு பிஜேபி தொடர்ந்து ராகுல் காந்திக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பயப்பட போவதில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போற போக்கில் புழுதி வாரி இறைப்பது போல் புகாரினை கூறக்கூடாது – ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். திமுக, அதிமுக போன்ற பல கட்சிகளை சேர்ந்தவர்களின் சொத்து குவிப்பு, ஊழல் போன்ற பட்டியலை வெளியிடும் அண்ணாமலை பாஜகவில் ஊழல் செய்பவர்களின் பட்டியலையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

ஒருவர் மீது குற்றம் சாட்டினால் முறையான ஆதாரங்கள் இருந்து, உச்சநீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும் பட்சத்தில் தான் அவரை குற்றவாளி. அரசியல் காரணத்திற்காக மட்டுமே அண்ணாமலை இதுபோன்று பேசி வருகிறார், என தெரிவித்தார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?