டெல்டா பகுதியில் 40% மகசூல் குறைவு… திமுக, காங்கிரசும் தான் காரணம் ; அண்ணாமலை குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
15 February 2024, 6:03 pm

டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, திமுக, காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- காவிரி நதியில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி, 40% குறைந்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க திமுகவின் கையாலாகாத்தனமே இதற்குக் காரணம். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக, விவசாயிகள் பற்றியோ, காவிரி தண்ணீர் பற்றியோ, எந்தக் கவலையும் இன்றி, சரியான நேரத்தில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காமல், தமிழக விவசாயிகளை வஞ்சித்திருக்கிறது திமுக அரசு.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடனேயே, போதுமான அளவு தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைத் திறந்து விட மறுத்து வந்தது. அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய திமுக அதற்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை.

இன்று, டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, இந்த இரண்டு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. போதிய மகசூல் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகளுக்கு, அதற்கான நஷ்ட ஈட்டை, தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!