உஷாரான பாஜக…. அண்ணாமலை சொல்லி கொடுத்தும் தவறு செய்யும் பிரதமர் மோடி ; கனிமொழி விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 12:38 pm

தூத்துக்குடி தொகுதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னெச்சரிக்கையாக இங்கு பாஜக போட்டியிடவில்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நேற்று தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க: கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது :- மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது வெற்றி திமுகவுக்குத் தான். முதலமைச்சர் கூறியதுபோல், இந்த தேர்தல் என்பது 2வது சுதந்திர போர். தமிழகத்தில் இருந்து நமது நிதியை ஜிஎஸ்டி எனக் கூறி எடுத்துச் சென்று விடுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவு நிதி கொடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு முறையாக நிதி திருப்பி கொடுப்பதில்லை. மழை வெள்ளத்துக்கு நிவாரணம் கேட்டுக் கொடுக்காததால், நமது முதலமைச்சர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை பாஜக மிரட்டுகின்றனர். சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்த்து கேள்விகளைக் கேட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் 2 பேர் சிறையில் உள்ளனர். யாருக்கு எந்த உரிமையும் கிடையாது. விவசாயிகள் நாடு முழுவதும் வங்கிக் கடன்களைத் திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து இல்லை. ஆனால், பெரிய பணக்காரர்களுக்கு சுமார் ரூ.15 லட்சம் கோடி கார்பரேட் வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் உள்ள ஏழை மக்கள் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையென ரூ.21 ஆயிரம் கோடி பிடித்தம் செய்யவிட்டுள்ளன.

மேலும் படிக்க: பிரித்தாளும் அரசியலை செய்யும் திமுக… அம்பலப்படுத்தாமல் ஓயமாட்டேன் ; வேலூரில் பிரதமர் மோடி சபதம்

இந்த பாஜக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிரித்து பிரச்சினைகளை கலவரங்களை உருவாக்கி வாக்கு வாங்கி அதே பதவியில் அமர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு நோட்டாவுக்கு கீழே தான், இதை யாரும் பிரதமருக்குச் சொல்லவில்லை.

இந்தி படிக்கக் கூறிய பிரதமருக்குத் தேர்தல் வந்தவுடன் தமிழ் படிக்க ஆசைவந்து விட்டது. தேர்தலுக்குப் பின்னர் அவர் சும்மாதான் இருப்பார். அதனால் முதல்வரிடம் கூறி தமிழ் சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியார் அனுப்பி வைப்போம். அண்ணாமலை தமிழனே இல்லை, கடைசி வரை கன்னடனாக வாழ விரும்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் சொல்லிக் கொடுத்து பிரதமர் திருக்குறளைத் திருக்குறள் மாதிரியே சொல்ல மாட்டேங்கிறார்.

தூத்துக்குடி தொகுதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னெச்சரிக்கையாக இங்கு பாஜக போட்டியிடவில்லை. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரப்போவது இந்தியா கூட்டணி. வேம்பார் பகுதி குடிநீர் பிரச்சனையைப் போக்க ரூ. 514 கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. விரைவில், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேசினார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?