என் மேல கேஸ் போட்டுட்டு எப்படி உயிரோட இருக்கீங்கனு பாக்கற : பெண்களை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 6:14 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் வசித்து வருகின்றனர்.

வின்சென்ட்டின் தம்பியும் அவரது மனைவியுடன் உடன் வசிக்கிறார். இவர்களுக்கு சொந்தமாக அக்கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கரும்பு பயிர் நடவு செய்து பராமரித்து வந்தனர்.

இதற்கிடையே, ரிஷிவந்தியம் ஒன்றிய திமுக கவுன்சிலரான யேசு ரட்சகர் என்பவர், இவர்களுடைய 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், அதில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை அடியாட்களுடன் சென்று மிரட்டி, சட்டவிரோதமாக தனது பெயரில் பதிவு செய்து, மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி, சுமார் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தட்டிக் கேட்ட ஆண்ட்ரூ வின்சென்ட்டின் மனைவி, 2 மகள்கள் மற்றும் ஆன்ட்ருவின் தம்பி மனைவி ஆகியோரை யேசு ரட்சகர் சில தினங்களுக்கு முன் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மூங்கில் துறைபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து யேசு ரட்சகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. தன் மீது புகார் அளித்த ஆத்திரத்தில், திமுக கவுன்சிலர் யேசு ரட்சகர், 2 தினங்களுக்கு முன் வீடு புகுந்து, ஆன்ட்ரூ வின்சென்ட் மனைவி, 2 மகள்கள் மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோரை தாக்கியதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும் நிலத்தை தனக்கு எழுதி தருமாறு அந்தப் பெண்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டபெண்கள் கள்ளக்குறிச்சி எஸ்.பி.அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து திமுக ஒன்றிய கவுன்சிலர் யேசு ரட்சகர்மீது மூங்கில்துறைப்பட்டு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டபெண் கண்ணீர் மல்க புகார் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுகவில் உள்ளவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுப்போம் என சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கவுன்சிலர் யேசுரட்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…