வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யும் திமுக கூட்டணி…? ஈரோடு இடைத்தேர்தலில் விதிமீறல்.. வைரலாகும் வீடியோ ; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா..?

Author: Babu Lakshmanan
20 February 2023, 2:26 pm
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த EVKS இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். இதைப்போல, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சைகள் என 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

ஓட்டுக்கு ரூ.4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர்கள் அதிமுகவினரின் கூட்டத்திற்கு செல்லாமல் இருக்க, சாமியான பந்தல் போட்டு அடைத்து வைத்து, பிரியாணி விருந்துடன் ரூ.1,000 வழங்குவதாக திமுக மீது அதிமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் விதமாக சாமியான பார்முலாவை திமுக கையில் எடுத்துள்ளதாக அதிமுக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு, திமுகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யப்பட்டு வரும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோவை அதிமுகவினரும், பிரபல அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரும் பகிர்ந்துள்ளார். அதில், திமுகவினர் தங்களுக்கு குக்கரை வழங்கியதாக வாக்காளர்கள் தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Views: - 389

0

0