திமுக தொடர்ந்து டார்ச்சர்… இப்படியே போனால் தற்கொலை செய்து கொள்வேன் : திமுக நிர்வாகி எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
11 March 2022, 6:15 pm
Quick Share

மனைவியை பதவி விலகச் சொல்லி திமுகவினர் தொடர்ந்து டார்ச்சர் செய்வதாக திமுக நிர்வாகியும், பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவரின் கணவருமான புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு பெற்று கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என கூட்டணி கட்சிக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். இதனை அறிந்த கூட்டணி கட்சியினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவருக்கு கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர், உடனடியாக தங்களது பதவியை விலக வேண்டும். அதனை கூட்டணி கட்சியினருக்கு விட்டுத்தர வேண்டும் என உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

இதனையடுத்து, ஒரு சில இடங்களில் திமுகவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேருராட்சி திமுக கூட்டணியில் விசிகவிற்கு தலைவர் பதவி ஒதுக்கபட்டது. ஆனால் திமுகவைச் சார்ந்த சாந்தி புஷ்பராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் விசிக சார்பில் போட்டியிட்ட சின்னவேடி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் திமுக தலைவரின் அறிக்கைக்குப் பிறகு சாந்தி புஷ்பராஜ் ராஜினாமா செய்ய வேண்டுமென கடந்த 5 நாட்களாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வந்தனர். ஆனால் சாந்தி புஷ்பராஜ் பதவி விலக முடியாது, தன்னை கட்சி விட்டு வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பேரூராட்சி தலைவராக வெற்ற பெற்ற சாந்தி புஷ்பராஜ் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தலைவருக்கான அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். மேலும் பேரூராட்சி தலைவராக சாந்தி பொறுப்பேற்றதாக பேசப்படுகிறது. இதனால் திமுக மற்றும் விசிக நிர்வாகிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்தியின் கணவர் புஷ்பராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- நான் திமுகவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். முன்னாள் பேரூராட்சி தலைவர், தற்போது திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விசிகவினர், பாமகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் தனியாக போட்டியிட்டேன். இது தலைமைக்கு தெரியாது.

பொ.மல்லாபுரம் பேரூராட்சி கூட்டணிக்கட்சியான விசிகவிற்கு ஒதுக்கியதால், என்னை பதவி விலக வேண்டும் என திமுக தலைமை டார்ச்சர் கொடுத்து வருகிறது. எனக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதால், நான் தற்கொலை செய்து கொள்வேன். என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை, நான் பதவி விலக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 1107

0

0