‘காங்கிரஸ்காரனை போல நாமும் நடிக்கனும்’.. சர்ச்சையை கிளப்பிய திமுக நிர்வாகி ; உடனே அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 8:21 pm
Quick Share

காவிரி விவகாரத்தில் காங்கிரஸைப் போல நாமும் நடிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் – கர்நாடகா இடையே மீண்டும் காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மெத்தனம் காட்டுவதாகவும், தமிழகத்தின் நதிநீர் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ்காரனை போல நாமும் நடித்தால் மட்டுமே, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் எதிர்கட்சியினர், காவிரி விவகாரத்தில் இதுதான் திமுகவின் உண்மை முகம் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த வீடியோவை பகிர்ந்து அவரது கருத்துக்களை X தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- திமுகவின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவது போல நடிக்க வேண்டும் என்று நாகை மாவட்டத் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன். மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார்.

இன்றைய தினம் சட்டசபையில், காவிரிப் பிரச்சினைக்காக தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு. காவிரிப் பிரச்சினையில், நாளொரு நாடகம் நடத்தி வரும் திமுக, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல ஒரு மாயையைக் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவது போல நடிக்கவிருக்கிறது.

இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக கட்சி நிர்வாகி ஒருவர் இப்படி பேசியிருப்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 300

0

0