திமுக அரசும் ஆளுநரும் புது காதலர்கள்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2024, 2:23 pm

தமிழக அரசும் ஆளுநர் ஆர்என் ரவியும் புதிய காதலர்கள் போல செயல்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளையோட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டமொம்மன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்கே தாங்கவில்லை. மழை பெய்யும் போது மேயர், அமைச்சர் வந்து பார்க்காமல் மழை நீர் வடிந்த உடன் ஆய்வு செய்கிறார்கள்.

திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்சன் மட்டுமே பார்க்கிறார்கள் மக்களை பார்ப்பதில்லை. மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர். புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர்.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட திமுக தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள். ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றார்கள். ஆனால் முதல்வரும் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். திடீரென டெல்லிக்கு செல்கிறார். பிரதமரை சந்திக்கிறார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது. ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்து சொல்லுவார். ஆனால் தற்போது மாறி இருக்கிறார்” என கூறினார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!