இந்தி பேசுறவங்க நல்லவங்க.. இந்தி கற்றுக்கொள்ளனும் : கமல் குடும்பத்தில் இருந்து கிளம்பிய வாய்ஸ்!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 May 2022, 4:39 pm
Quick Share

இந்தியாவில் இந்தி மொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கமல் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதைத் தொடர்ந்து, திரைப்பிரபலங்களிடையே, மொழிச்சண்டையை உண்டாக்கியது. குறிப்பாக, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மொழி முக்கியத்துவம் பற்றிய கருத்துக்கள் எழ ஆரம்பித்தன.

அதிலும், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இடையேயான மொழிச்சண்டை பெரிய பிரளயத்தையே உண்டாக்கியது. ஆனால், தமிழகத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இந்தியை ஏற்க மாட்டோம் என்று பேசி வருகின்றனர். இந்தி மொழி விவகாரத்தில் அரசியல் கட்சி பிரபலங்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளும், பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுகாசினி இந்தி மொழியை ஆதரித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாசினி பேசியதாவது :- அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். நாம் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று, தமிழர்களும் நல்லவர்கள்தான். அவர்களும் தமிழில் பேசினால் சந்தோஷப்படுவார்கள். பிற மொழிகளை பேசுவதால், நான் தமிழர் என்று இல்லாமல் ஆகிவிடாது,” எனக் கூறினார்.

சுகாசினியின் இந்தக் கருத்திற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 816

1

0