இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது.. முதல்ல அண்ணாமலை வெளியிடட்டும் ; அதுக்கப்புறம் தான் ஆட்டமே இருக்கு ; ஜெயக்குமார் கொந்தளிப்பு

Author: Babu Lakshmanan
15 April 2023, 11:58 am
Quick Share

சென்னை : அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் என்றும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசியதாவது :- ஊழலிலே திளைத்த கட்சி திமுக என்று உலகத்திற்கே தெரியும். திமுகவிற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவை ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த 1 இலட்சத்து 34 கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம்.

அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம். ஆனால் வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் அதன் பின்னர் எங்களுடைய ரியாக்சனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.

அதிமுகவினரில் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், அதிமுகவினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுத்தால் எல்லாம் அது எங்களிடம் பலிக்காது.

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் திமுகவை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது. 24 மணிநேரம் செயல்பட்டு வருகின்ற காவல் துறை அடிவாங்கும் காவலந்துறையக மாறி உள்ளது.

ஒவ்வொரு காவலர்களும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவா இல்லை என் குழந்தையின் கால் போய் விட்டது, யார் மேலும் நடவடிக்கை என்று போராடுகிறார்.

இந்த இரண்டு வருடங்களில் காவலர்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்து வருகிறது. காவல் துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. காவல் துறைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகிறேன், என்றார்.

Views: - 290

0

0