முல்லைப்பெரியாறு அணை உரிமையை தாரைவார்த்த திமுக அரசு… கர்நாடகாவைப் பார்த்து கத்துக்கோங்க… ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
6 August 2022, 2:34 pm
Quick Share

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோதபோக்கை திமுக அரசு தொடர்ந்தால், ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- முல்லைப் பெரியார் அணையில் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கனஅடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதனால், தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

ரூட் கர்வ் மூலம் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் மூன்று மதகுகள் மூலம் திறந்துள்ளார்கள். இதன்மூலம் ஐந்து மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது. 

விவசாயிகளின் இரண்டு ஆண்டு கால நம்பிக்கை திமுக அரசு சீர்குலைத்துள்ளது. இதனால், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும். தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு கேரளா அரசின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது, அதை கேரளா அமைச்சர் ரோசி அகஸ்டின் அணைக்குச் செல்லாமல் வல்லக்கடவு பகுதியில் தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்கள். அம்மா முதலமைச்சர் இருந்த போதும், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதும், மூன்று முறை முல்லை பெரியார் அணைநீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்டது.

எடப்பாடியார் தற்பொழுது முதலமைச்சர் இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது, திமுக அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி ஏறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.

கர்நாடக அரசு காவிரி பிரச்சனையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தூக்கி ஏறிந்து மக்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்தனர். ஆனால் இன்றைக்கு கேரளாவின் ரூல் கர்வ்வை நிறைவேற்ற 142 அடியாக உயரும் போது, விவசாயின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளது தமிழக அரசு. 

இதை வன்மையாக கண்டித்து வரும் வேளையில், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்திருந்தால், இன்றைக்கு விவசாயிகளின் உரிமை காப்பாற்றப்பட்டிருக்கும். இந்த நிலை வந்திருக்காது என்று விவசாயிகள் மத்தியில் கூறி இருக்கின்றனர்.

கேரளா முதலமைச்சர் வியாழக்கிழமை கடிதம் எழுதுகிறார். அதற்கு வெள்ளிக்கிழமை பேசி வைத்த நாடகம் போல், விடியா திமுக அரசு தண்ணீரை திறக்கிறது. கேரளா அழுத்தத்திற்கு அடிபணிய கூடாது, என்பதை விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த பிறப்புரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி விவசாயிகளை திமுக அரசு நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. கடிதத்திற்கு அடுத்த நாள் தண்ணீர் திறந்து விட்டது கடும் கண்டனத்துக்குரியது. 

தமிழக அரசு தமிழக விவசாயிகளை பாதிக்கும், ரூட் கர்வ்வை மாபெரும் சட்ட போராட்டத்தை தொடர்ந்து மக்கள் உரிமையை காத்திருக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை, திமுக அரசு தொடர்மையானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அனுமதியை பெற்று, எடப்பாடியார் தலைமையில், ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம், என்று கூறியுள்ளார்.

Views: - 535

0

0