மதுரையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வந்தது தெரியுமா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 5:40 pm
Quick Share

தேர்தலை கருத்தில் கொண்டு மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவிததுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- மதுரை வளர்ந்த சிறந்த நகரமாக உள்ளது. தொல்லியல் நகரமாக உள்ள மதுரையை வளர்ந்த நகரமாக மாற்ற முயற்சி எடுத்தது அதிமுக தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 5 ஆயிரம் கோடிக்கு மதுரையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதல்வர் தற்போது அறிவிப்பாக வெளியிட்டு உள்ளார்.

முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்க்கு பதில் வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம். மதுரையை மிக உயரிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் நீர் நிலைகள் தூர் வாரி நிலத்தடி நீர் நிலை நிறுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார். மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும்.

திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்படுகிறது என முதல்வர் விளக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு அறிவிக்க வேண்டும். வெளியான அறிவிப்பு அறிவிப்பாக இருக்கக்கூடாது.

மக்கள் எங்கள் பக்கம், நாங்கள் மக்கள் பக்கம். மக்கள் தான் எல்லாமும் அவர்கள் தான் எஜமானார்கள். ஜல்லிக்கட்டு நாயகனாக ஒபிஎஸ். குடிமராமத்து நாயகனாக ஈபிஎஸ் உள்ளனர். பெண்களை மையப்படுத்தி அதிமுக திட்டங்களை கொண்டு வந்துள்ளது, எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது, தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர்க்கொள்கிறது, எனக் கூறினார்

Views: - 2628

0

0