தூத்துக்குடி மாணவி சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல்: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!!

Author: Rajesh
2 March 2022, 7:16 pm

சென்னை: பாஜக குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக கூறி மாணவி சோபியாவின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில், தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவும் பயணித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் மாணவி சோபியா, பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோஷமிட்ட சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

விசாரணைக்குப் பிறகு சோபியாவை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களும் போலீஸாரால் முடக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஏ.ஏ. சாமி, மாநில உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், எனது மகளை விசாரணை என்ற பெயரில் மதியம் முதல் இரவு வரை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு போலீஸார் உள்ளாக்கினர் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாஜகவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கூறினார். மேலும், மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!