தேவையில்லாத சங்கடங்களை விரும்பவில்லை… காங்., எம்பி ஜோதிமணியுடன் டிஷ்யூம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது என்ன..?

Author: Babu Lakshmanan
31 January 2022, 6:42 pm
Quick Share

கரூர் : தேவையில்லாத சங்கடங்கள் (காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை) வருவதை நாங்கள் விரும்பவில்லை காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் கலந்து ஆலோசிக்காமல், அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார்..? வெளியே போ..? என்று திமுகவினர் ஒருமையில் பேசியதாக தெரியவருகின்றது. இதையடுத்து, ஜோதிமணி அங்கிருந்து ஆவேசமாக புறப்பட்டுச் சென்று விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கரூர் மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை.

மேலும், 3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. தலைமையிடம் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. ஆகவே, எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும். கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும், எனக் கூறினார்.

Views: - 1212

0

0