நீதிமன்ற உத்தரவை மீறி கட்டப்பட்டுள்ள திமுக கொடிகள்… விபரீதம் நடப்பதற்கு முன் அகற்றப்படுமா..? எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள்..!!

Author: Babu Lakshmanan
9 June 2022, 10:23 am
Quick Share

கரூர் : நீதிமன்ற உத்திரவினை மீறி, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள திமுக கொடிகள் அகற்றப்படுமா ? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர் நகரத்தில் இரவு நேரத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மினி பேருந்துகள் தான் அதிகளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கரூர் மினி பேருந்து நிலையத்திலிருந்து அந்தந்த ஸ்டாப்பிற்கு செல்ல பயணிகளை ஏற்றி செல்லும் நிலையில், செல்லும் போது ஆமை வேகத்திலும், மினி பேருந்து நிலையத்திற்கு வரும் போது மினி பேருந்துகள் மின்னல் வேகத்திலும் வருகின்றன.

கரூர் நகரம் என்றாலே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரில் நெம்பர் ஒன் ஆக இருந்து வரும் நிலையில், இதற்கு முன்னர் பணியாற்றிய, கரூர் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் திடீரென்று காத்திருப்பு பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பசுபதிபாளையம் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தான், கரூர் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளராக (பொ) பணியாற்றி வரும் நிலையில், கரூர், பசுபதிபாளையம் ஆகிய இரு போக்குவரத்து காவல்நிலையங்களையும் ஒருவரின் தலையில் கட்டுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கரூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் கரூர் டூ காந்திகிராமம், கரூர் டூ தாந்தோன்றிமலை ஆகிய ஊர்களுக்கு செல்லும் மினி பேருந்துகள் பேருந்து நிலையம் ரவுண்டானாவை கடந்து, காமராஜர் சிலை அருகே உள்ள மூலையில், நின்று செல்வதாலும், சில நிமிடங்கள் நிற்பதாலும், கரூர் டூ திருச்சி, கரூர் டூ தஞ்சாவூர், கரூர் கும்பகோணம் என்று திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும், திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பின்னால் நின்று டிராபிக் ஜாம் ஏற்படுத்துகின்றன.

போதாத குறைக்கு, மினி பஸ்ஸுக்கு பின்னரே ஷேர் ஆட்டோக்களும் அதிகளவு நின்று, போக்குவரத்து காவலர்களுக்கே, டாட்டா காட்டும் அளவிற்கு நடந்து வரும் நிலையில், இருசக்கர வாகன ஒட்டிகள், அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் பயணிகள் தினந்தினம் புலம்பிய படியே சென்று வருகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்கும் கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனன், போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண்பாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென்றும் கூறுகின்றனர் சமூக நல ஆர்வலர்கள். அதுமட்டுமில்லாம, எந்த நிகழ்ச்சியும் திமுகவில் இல்லாத நிலையில், தினந்தோறும் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் திமுக கொடிகள் பறந்து கொண்டே உள்ள நிலையும் உள்ளது. நீதிமன்றமே விளம்பரம் செய்யாதே என்ற உத்தரவும் அப்பகுதியில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி, பிறந்த தினம், கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இன்றும் அந்த திமுக கொடிகள் அகற்றப்படாத நிலையில், ஏற்கனவே, நீதிமன்றமே அப்பகுதியில் விளம்பரமும், கொடியோ கட்டக்கூடாது என்ற உத்தரவினையும் மீறி, கரூர் திமுகவினர் கொடிகளை கட்டியிருப்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்றொரு புறம் இரும்பு ராடுகளை கொண்டு கட்டப்பட்டுள்ள கொடி கம்பங்கள் திடீரென்று பயணிகள் மீது விழுந்தால், பயணியின் நிலை, கர்ணம் தப்பினால் மரணம் தான் என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள், ஆகவே, கரூர் மாவட்ட நிர்வாகமும், கரூர் மாவட்ட காவல்துறையினரும் முழு வீச்சில் செயல்பட்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டுமென்கின்றனர் ஒருமித்த நடுநிலையாளர்கள்.

Views: - 849

0

0