2 நாட்களாக பாறை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர்… இந்திய ராணுவத்தின் சாமர்த்தியம்.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

Author: Babu Lakshmanan
9 February 2022, 11:07 am
Quick Share

கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட வாலிபரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது.

கேரளா மாநிலம் மலம்புழா மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கிற்கு பாபு என்ற வாலிபர் அவரது நண்பர்களுடன் கடந்த திங்கட்கிழமை டிரெக்கிங் சென்றுள்ளார். அப்போது, மலைப்பகுதியில் இருந்து தவறி விழுந்த அவர், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டார். இதைதொடர்ந்து, பாபுவின் நண்பர்கள் மரக்குச்சிகள், மரக் கட்டைகள், கயிறுகள் என அனைத்தையும் முயற்சித்தனர். ஆனால் பாபுவால் மேலே ஏற முடியவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புப் படையினரும் மலம்புழா காவல்துறையினரும் நள்ளிரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணியைத் தொடங்க முடியாததால், குழு அங்கேயே முகாமிட்டது. காலையில், அவர்கள் பாபுவை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு குழுவினர் ட்ரோன் மூலம் வாலிபரின் நிலை குறித்த காட்சிகளை சேகரித்தனர்.

இதையடுத்து கொச்சியில் இருந்து கடலோர காவல்படை ஹெலிகாப்டர் சென்று அவரை மீட்க முயன்றபோது, ​​பாபு சிக்கிய இடைவெளிக்கு அருகில் ஹெலிகாப்டர் செல்ல முடியவில்லை. இருப்பினும், உணவு, குடிநீரை மட்டும் வழங்கினர். பின்னர், ​​கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியை மேற்கொள்ள, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மிருண்மயி ஜோஷி சஷாங்க், கடற்படையின் உதவியை நாடினார்.

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு கயிறு இறக்கப்பட்டது. ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. ஹெலிகாப்டர் அந்த இடைவெளியில் சிறிது நேரம் வட்டமிட்டது, ஆனால் பாபு கைக்கு எட்டாததால் திரும்ப வேண்டியதாயிற்று. இதைத் தொடர்ந்து, ​​தேசிய பேரிடர் மீட்புப் படையின் முயற்சியும் கைகொடுக்கவில்லை.

இளைஞர் பாபுவை மீட்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், முதல்வர் பினராயி விஜயன், இளைஞரை மீட்க இந்திய ராணுவத்திடம் உதவி கோரினார். அதன்படி, பெங்களூருவில் இருந்து ராணுவ சிறப்புப் படைக் குழுவும், ராணுவத்தின் மற்றொரு பிரிவு வெலிங்டனில் இருந்து புறப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், மலையேற்ற அனுபவமுள்ள ராணுவ வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 7 மணிநேரம் நடந்த தொடர் போராட்டத்திற்கு பிறகு இளைஞரை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Views: - 1161

2

0