டெங்கு, கொரோனா போல சனாதனத்தையும் வேறோட ஒழிக்கணும் : அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 7:55 pm

டெங்கு, கொரோனா போல சனாதனத்தையும் வேறோட ஒழிக்கணும் : அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு!!!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று, சனிக்கிழமை, ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

“இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டியது.” என்று வலியுறுத்தினார்.

“சனாதனம்னா என்ன? சனாதனம் அப்படிங்கிற பெயரே சமஸ்கிருதத்துல இருக்கு. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம்னா வேற ஒன்னுமில்ல. நிலையானதுனு அர்த்தம். அதாவது மாறாததுனு சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதையும் கேள்வி கேட்கணும்னு உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி தனது 5 வயது முதல் 95 வயதுவரை சனாதனத்தை எதிர்த்து போரிட்டார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

மாநாட்டில் பங்கேற்ற பின், ட்விட்டரில் அதுபற்றி பதிவிட்டுள்ள உதயநிதி, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று பங்கேற்றோம். ஈராயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை, திராவிட – கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம்; சமத்துவத்தையும் – சமூகநீதியையும் நிலைநாட்டுவோம் என உரையாற்றினோம். சனாதனம் வீழட்டும் – திராவிடம் வெல்லட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!