கருணாநிதியே 5ம் வகுப்பு தான் படிச்சாரு… படித்தவர்கள்தான் கருத்து சொல்லனும் என்று அவசியமில்ல ; ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

Author: Babu Lakshmanan
5 March 2024, 1:03 pm

திமுக எந்த பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை என்றும், யாரை வைத்து வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- பிஷப் கால்டுவெல் ஒரு சிறந்த ஆய்வாளர். ஒருவர் படித்து விட்டு வந்து தான் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூட ஐந்தாம் வகுப்பு தான் படித்துள்ளார். அவர் எழுதிய தொல்காப்பியம் போன்ற உரையை வேறு எந்த அறிஞர்களும் எழுத முடியாது. அதனால், ஒருத்தர் கல்லூரி படிப்பு படித்து விட்டு வந்து தான் எழுத வேண்டும். கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தமிழக அரசியலில் தற்போது பாஜகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. திமுகவிற்கு எதிர்க்குரல் எழுப்ப வேண்டும் என்பதற்காக, ஆளுநர் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற கருத்துக்களை பேசி வருகிறார். பாஜகவை போல் அவரும் ஒரு எதிர்க்கட்சியினரை போல் செயல்பட்டு வருகிறார்.

தேர்தலுக்காக எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கிய போல் கண்துடைப்பு வேலைகளை செய்கின்றனர். தேர்தலுக்கான கண்துடைப்பு பணிகளை செய்வதில் அவர்கள் மிகுந்த கெட்டிக்காரர்கள். மோடி 10 பணக்காரர்களிடம் கொடுத்துள்ள பணத்தைக் கொண்டு வந்ததால், இந்தியாவில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம்.

நாங்கள் எந்த பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை. எங்களிடம் எந்த பணமும் இல்லை. எங்களிடம் எங்கு வேண்டுமானாலும் வந்தும் சோதனை செய்து கொள்ளட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. மோடி சொல்ற இது போன்ற கருத்துக்கள் எல்லாம் மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!