பணமா..? ஆவணமா..? வழக்கறிஞர் வீட்டில் ரெய்டு… இரண்டு பெட்டிகளை எடுத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ; கரூரில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 1:12 pm
Quick Share

கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகங்கள், கல்குவாரி, அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞரும், பத்திர எழுத்தாளருமான செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று மதியம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விடிய விடிய சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காலை சோதனையிடையே சற்று முன்னர் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன், இரண்டு அட்டை பெட்டிகளை காரில் வைத்து எடுத்துச் சென்றனர். அந்தப் பெட்டியில் இருப்பது என்ன..? என்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதும் சோதனையை வருமான வரித்துறையினர் தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 352

0

0