இசையமைப்பாளர் தேவா, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் போலி : தலைமறைவான பிரபலம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 9:19 am

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், சினிமா டான்ஸ் மாஸ்டர் சாண்டி யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் உள்பட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனும் இந்த விருதை பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளி நாயகம் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

சினிமா, சமூகப்பணி, அரசியல் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சிறந்த பொழுதுபோக்கு பிரிவில் கவுரவ டாக்டர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அவர் நிகழ்ச்சிக்கு வராததால் நேரில் சென்று சந்தித்து டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

இப்படி போலி பட்டம் மற்றும் விருதுகள் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தே நடைபெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலி டாக்டர் பட்டம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!