பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட இபிஎஸ்… ஓபிஎஸ் தரப்பிலும் போடப்பட்ட அப்பாயிண்ட்மென்ட் : தமிழக அரசியலில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 6:45 pm

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 8ம் தேதி சென்னைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பின்பு, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு சென்னை – கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.

பின்னர், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரு குட்டி யானைகளை வளர்த்து ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்திக்கும் விதமாக, பிரதமர் மோடி 9ம் தேதி தெப்பக்காடு பகுதிக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர் செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அதே வேளையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபன்னீர் செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளது முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…