ஒடிசா விரைந்தது அமைச்சர்கள் குழு… உதவிகள் செய்ய தயார் நிலையில் தமிழக அரசு ; ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்..!!

Author: Babu Lakshmanan
3 June 2023, 10:20 am
Quick Share

ஒடிசா ரயில் விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 2வது நாளாக நடந்து வருகிறது. இதனிடையே, ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் உதவிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், கட்டுப்பாட்டு அறையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அலைபேசிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ஒடிசா முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தேன். உதயநிதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், அர்ச்சனா பட்டினநாய்க் ஆகியோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணிகள் உதவிகள் தேவைப்பட்டால் தமிழக அரசின் சார்பில் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தேன். தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் சந்தித்து இது குறித்து கேட்டு அறிந்தேன்.

நான்கு ஐந்து நாட்கள் அங்கிருந்து தங்கி அவர்களுக்கான உதவிகள் செய்ய மாவட்ட அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் பாதிக்கப்படுபவர்கள், அங்கிருந்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இன்றைய நாள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். தமிழக அரசு சார்பில் துக்க நாளாக இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் இன்றைய நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்களும் whatsapp எண்களும் பொது மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில நிர்வாகத்துடன் நமது அதிகாரிகள் தொடர்ந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காணொளி காட்சி மூலமாக அங்க செய்யப்பட்டு இருக்கிற நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம், என தெரிவித்தார்.

Views: - 214

0

0