275 பேரை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து… ஆக்ஷனில் இறங்கிய போலீசார் ; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

Author: Babu Lakshmanan
5 June 2023, 9:26 pm
Quick Share

275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.

முதலில் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என தெரியாத நிலையில், பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோதியது தெரிய வந்தது.

இந்த விபத்தினால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே சட்டம் 153,154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Views: - 284

0

0