கம்யூனிஸ்ட் கட்சியின் யோகியதை தான் தெரியுமே.. எதுக்கு தேவையில்லாத வேலை : விளாசும் ஈவிகேஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2024, 12:51 pm

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அது சாத்தியமா என்று எனக்கு தெரியவில்லை.

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் சொல்ல விரும்புவது ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும். விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனவே கள்ளு கடைகளை திறப்பது சாத்தியமா என தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

நீட் தேர்வு சம்பந்தமாக நேற்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். தமிழகத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றார்கள். மோடிக்கு ஜனநாயக உணர்வு இருந்தால் அதை செய்வார் என்று நினைக்கின்றேன்.

அதிமுகவை பொறுத்தவரை சட்டசபையில் அவர்களுக்கு பேச வாய்ப்பு தருகிறார்கள். சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதியுங்கள் என்று சொன்னார். ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு விவாதிக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லாத காரணத்தால் சட்டசபையில் நாடகமாடுகிறார்கள். இதன் மூலம் திமுகவை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்ன செய்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும்.

ராகுல் காந்தி பிறந்த நாளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து கூறியது நாகரீகமான பழக்கம். வாழ்த்து சொல்வதன் மூலம் கூட்டணி ஏற்படும் என்று சொல்வது சரியாக இருக்காது. சிலர் விஜயோடு சேர வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய முயற்சிகள் எடுக்கிறார்கள்.

இதுவரை நான் தனியாக நின்று தனியாக தோற்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று விஜய்க்கு உள்ள அர்த்தத்தோடு பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். விஜயை பொறுத்தவரை அவர் இன்னும் அவரது கொள்கையை பற்றி சொல்லவில்லை.

நீட்டை பற்றி அவர் வாய் திறக்கவில்லை, மது சம்பந்தமான உயிரிழப்புகளை நேரில் சென்று பார்த்ததோடு சரி அது தொடர்பாகவும் அவர் வாய் திறக்கவில்லை. எனவே விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.

வயநாடு இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் தேவையில்லாமல் போட்டியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட் யோகிதை என்ன என்பதை போன தேர்தலில் நாம் பார்த்தோம்.

மீண்டும் மீண்டும் இன்று அவர்கள் ஏன் மூக்கு அறுபட வேண்டும்? பிரியங்கா நிற்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் கூட எங்கள் பிரியங்கா காந்தி அங்கு நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெறுவார் எனக் கூறினார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?