முட்டிங்கால் அளவு மழைநீரில் கான்கிரீட் … சென்னையில் விஞ்ஞான முறையில் மழைநீர் கால்வாய் போட்ட அவலம்; ‘எந்த ஊழலை மறைக்க’ என கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 10:16 am
Quick Share

சென்னை ; சென்னையில் மழைநீரை அகற்றாமல், அப்படியே கான்கிரீட் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டிய அவலம் நடைபெற்றுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை 36வது வார்டு புருஷோத்தம நகரின் 3வது தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென மழை பெய்ததால், மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெள்ளம் தேங்கி நின்றது.

இதனால், கான்கிரீட் போடுவதற்காக தயார் செய்யப்பட்ட கலவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை சற்றும் பொருட்படுத்தாத ஊழியர்கள், கான்கிரீட் கலவையை தேங்கிய மழைநீரில் கொட்டி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தனர்.

முழங்கால் அளவு தண்ணீரில் சிமெண்ட் கலவையை எதற்காக கொட்டுகின்றனர் என்ற சந்தேகமும், கேள்வியும் அங்கிருந்த பொதுமக்களிடையே எழுந்தது. ஒருசிலர் என்னதான் நடக்கிறது என்பதை அங்கு பொறுத்திருந்து கவனித்தனர். அப்போது தான் தெரிந்தது, மழைநீரில் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவது.

மழை தண்ணீரில் கலவையை கொட்டி கான்கிரீட் அமைத்தால் தரமானதாக இருக்குமா..? என்ற எந்த எண்ணமும் எழாமல் ஒப்பந்ததாரரின் உத்தரவின் பேரில், காரணமே இல்லாமல் கலவையை ஊழியர்கள் கொட்டிக் கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் கலவையை கொடி வீணடித்த அதே வேகத்தில் தண்ணிருக்குள் தரைதளம் செட்டாகி விட்டது போல, பலகையை கொண்டு பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக தண்ணீருக்குள் பலகைகளையும் இறக்கினர். இதனை கண்ட பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவச் செய்தனர்.

இந்த விஞ்ஞான கால்வாய் பணிகளை தடுக்க தவறிய இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

Views: - 357

0

0