திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் கொள்ளிடத்தில் உயிர் பலி : அண்ணாமலை காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 11:47 am

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப் பட்டியைச் சேர்ந்த 40 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர்.

அவர்களில் சார்லஸ், பிரவின் ராஜ், பிரித்வி ராஜ், தாவித், ஈஷாக், தர்மஸ் ஆகிய 6 பேரும் ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாதக் காரணத்தால் இவர்கள் ஆறு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீரில் சிக்கிய உடல்களை மீட்டனர். இன்று காலை வரை 5 பேரின் உடல்களை மீட்ட தீயணைப்பு துறையினர் மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சுற்றுலா வந்த இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில் இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

இது திறனற்ற திமுக அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லையென்று தெரிவித்துள்ள அவர், ஜூன் மாதத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற ஏழு பேர் மணல் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற திமுக அரசே பொறுப்பு என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?