‘நீங்க வெளியே வந்தால் நாக்கு இருக்காது… அண்ணாமலையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு’ ; அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
22 December 2022, 10:38 am
Quick Share

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் எனப் பேசிய அமைச்சர் கீதாஜீவனுக்கு பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை அணி செயலாளர் அசோகன், பாஜக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், சட்ட மன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர், 1,000 ஏழை எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின் மற்றும் சேலைகளை வழங்கினர்.

பின்னர், சசிகலா புஷ்பா பேசியதாவது:- ஒன்றரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை. ஆகவே, அவரை புகழ்கிறோம். முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பு வழக்குக்கு நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டு போய் நிறுத்தி தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை.

24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச தகுதி இல்லை. மரியாதையாக பேச சொல்லி கொடுத்த பண்பு பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அண்ணாமலைக்கு ஆங்காங்கே மக்கள் கூட்டம் நிற்கிறது. சனாதனம் பற்றி பேசுவோம், அது எங்கள் கொள்கை. தேர்தல் வாக்குறுதியான மக்களுக்கு 1,000 ரூபாய், கல்வி கடன் ரத்து போன்றவை ஏமாற்றம், எனக் கூறினார்.

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். அதற்கு பதிலடி அளித்த அவர் பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என சாடினார்.

பின்னர், நீங்கள் செய்யும் ஊழலை பற்றி சொல்லுவோம். சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை.. நாகரீக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது இங்கு திமுக தோற்க போகிறது. பாஜக வெற்றி பெற போகிறது, என கூறினார்.

Views: - 397

0

0