‘அப்பா, அம்மா பாவம்… ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றுங்க’ ; ஆசிரியர்கள் போராட்டத்தில் முழங்கிய சிறுவன் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 12:26 pm
Quick Share

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், சிறுவயது குழந்தையிட்ட முழக்கம் வைரலாகி வருகிறது.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய திமுக அரசு தங்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கினர்.

தொடக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவரின் சிறுவயது மகன், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். வெல்லட்டும், வெல்லட்டும் ஒற்றை கோரிக்கை வெல்லட்டும் என்று அந்த சிறுவன் முழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 409

0

0