முத்திரைத்தாள் சர்ச்சை.. அண்ணாமலை வேட்புமனு செல்லாதா? தேர்தல் ஆணையத்தில் அதிமுக, நாதக புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 6:18 pm

முத்திரைத்தாள் சர்ச்சை..அண்ணாமலை வேட்புமனு செல்லாதா? தேர்தல் ஆணையத்தில் அதிமுக, நாதக புகார்!!!

கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் பரிசீலனையின் போதே அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்புக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

தற்போது அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது; அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் மனு கொடுத்துள்ளது. அதில், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாளில்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத நீதிமன்ற முத்திரைத் தாளைப் பயன்படுத்தி அண்ணாமலை வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அப்பட்டமான விதிமீறல். இதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கவே கூடாது. இதற்கு தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில், அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்புக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!