சுட்டு தள்ளுங்க… மோடி இருக்காரு : அண்ணாமலை பேச்சுக்கு எதிர்ப்பு… முதலமைச்சருக்கு பறந்த புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 11:48 am
CM And Annamalai - UPdatenews360
Quick Share

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், உங்களுடைய கைகளில் துப்பாக்கி இருக்கிறது.. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது.

ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டு தள்ளிகிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சத்தை பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும்.. இவ்வாறு அண்ணாமலை பேசுவதாக அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ காட்சியில் அண்ணாமலையின் பேச்சின் ஒரு பகுதி மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. முழு பகுதியும் இடம்பெறவும் இல்லை. இதனை சுட்டிக்காட்டி திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா?

முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்.

இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். அண்மையில் கிருஷ்ணகிரியில் பாபு என்கிற ராணுவ வீரர் குடும்பத் தகராறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, ராணுவத்தினருக்கு எதிராக இருப்பதாக இந்த கொலை சம்பவத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது.

மேலும் முன்னாள் ராணுவத்தினரை உள்ளடக்கிய ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் பாஜக அண்மையில் நடத்தியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்பவர், ராணுவ வீரர்கள் வெடிகுண்டுகள் வைப்பதில் கை தேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என்றெல்லாம் மிரட்டல் விடுத்திருந்தார். இதனை செய்தியாளர்கள் கண்டித்த போதும், ஆமாம் வெடிகுண்டு வைப்போம் என பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இதனால் கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தக் கூட்டத்தில்தான் அண்ணாமலை, சுட்டுத் தள்ளுங்க.. மோடி ஆர்டர் இருக்கிறது.. பாஜக பார்த்துக் கொள்ளும் எனவும் அண்ணாமலை பேசியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை பேசியது: கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சியின் தலைவர்கள் இருக்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு.

எதற்கு இதை செய்கிறோம் எனில் பார்டரில் இருக்கக் கூடிய ஒரு ஒரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து ஒரு உரக்கமாக ஒரு செய்தியை சொல்லுகிறோம். அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது.

ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும். எதற்கும் பயப்படாமல் பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரனும் கூட இந்தியன் ஆர்மியில் இந்த பேட்சைப் போட்டுகிட்டு சொல்வீங்க.. என நீள்கிறது இந்தப் பேச்சு. அண்ணாமலையின் இந்த பேச்சின் ஒருபகுதியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.

Views: - 333

0

0