சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் பார்கள் திடீர் மூடல் : பார் தான் எங்களுக்கு SAFE.. மதுப்பிரியர்கள் குமுறல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 10:22 pm
Bar Closed - Updatenews360
Quick Share

ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் சென்னையில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் பெரும்பாலும் பார்களுடன் இயங்கி வருகிறது. பார்கள் நடத்துவதற்கு ‘டெண்டர்’ நடைமுறை மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ‘டாஸ்மாக்’ பார்களின் டெண்டர் காலம் கடந்த 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து புதிய உரிமம் பெறுவதற்கு கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பார் உரிமையாளர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில், ஏற்கனவே உரிமம் உள்ளவர்களுக்கு நீட்டித்து தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கில் பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம். ஆனால் யாருக்கும் உரிமம் வழங்க கூடாது என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உள்பட மாவட்டங்களில் பார் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் 31-ந்தேதியுடன் முடிந்துவிட்டதால், டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில் ஒப்பந்தம் முடிந்த பார்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பார்கள் மூடப்பட்டுள்ளன.

Views: - 434

0

0