30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு கிடைத்தது ஜாமீன்… மற்ற 6 பேரும் விரைவில் ரிலீஸ் : வழக்கறிஞர் சொன்னது என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
9 March 2022, 4:39 pm
Quick Share

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜிவ் வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் பேரறிவாளன் உடல்நிலையைக் காரணம் காட்டி அடிக்கடி பரோலில் வந்து செல்கிறார்.

Rajiv case condemns- Updatenews360

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டி, கடந்த அதிமுக ஆட்சியின் போது, சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி ஆணையிட்டனர்.

 மாநில அரசு

இதன்மூலம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் முதல் நபருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பேரறிவாளனின் வழக்கறிஞர் சங்கரநாராயணனின் துணை வழக்கறிஞர் பிரபு, பேரறிவாளனைத் தொடர்ந்து மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுதாவது :- பேரறிவாளனுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நடுநிலையோடு வாதிட்டது. காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோட்சேவுக்கு கருணை கொடுக்கும் போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை காட்டக் கூடாதா..? இந்த வழக்கி மத்திய அரசு சட்டத்தையே மாற்ற பார்க்கிறது.

Supreme_Court_UpdateNews360

இறுதி விசாரணை முடியும் வரை பேரறிவாளனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பேரறிவாளனை தொடர்ந்து, மற்ற 6 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 7 பேரின் வழக்கும் ஒரே மாதிரியானது. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு 7 பேருக்கும் பொருந்தக் கூடியது. ஆனால், மற்ற 6 பேரும் தனித்தனியே மனு போட வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பிருக்காது.

ஏனென்றால், இந்த வழக்கில் அடுத்த மாதமே இறுதி விசாரணை வைத்துள்ளனர். அதில், 7 பேருக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. மாநில அரசின் முடிவை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்பட்டன, என தெரிவித்துள்ளார்.

Views: - 883

0

0