மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்ட்…திருச்சி டிஐஜி உத்தரவு.!!

Author: Rajesh
17 March 2022, 12:34 pm
Quick Share

புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் சங்கர். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்து தொடர்ந்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று மாற்றுத்திறனாளி சங்கரை காவலர்கள் லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சங்கர் விராலிமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தாயார் புகார் அளித்ததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளியை தாக்கிய விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் செந்தில், அசோக், பிரபு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். தற்போது, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Views: - 697

0

0