தமிழக அரசை திகைக்க வைத்த #Powercut_dmk… திடீர் மின்வெட்டால் பாதிக்கும் மக்கள்… கொதித்தெழுந்த எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
21 April 2022, 1:07 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், தமிழக அரசையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் பொதுமக்கள் வசைபாடி வருகின்றனர்.

கடந்த ஓரீரு தினங்களுக்கு முன்பு சட்டபேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, கோடை காலத்தை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும், கொரோனாவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சரிசெய்து விடலாம் என்ற திட்டமும் தொழில்நிறுவனங்களிடையே எழுந்தது.

Senthil Balaji - updatenews360

ஆனால், நடந்ததோ வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பு வெளியாகி சில மணிநேரங்களிலேயே, தமிழகம் மின்வெட்டில் சிக்கி தவித்தது. பல்வேறு மாவட்டங்களில் 1 மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரையில் நேற்று இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூர் கூட இருளில் மூழ்கிய சோகம் நடந்துள்ளது. நேற்று இரவு 7 மணியில் இருந்து கரூர் மாநகராட்சியில் மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள், வியாபாரிகள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் என பலர் பாதிப்படைந்துள்ளனர்.

சாலைகளில் வைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து விபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மின்வெட்டே ஏற்படாது என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மீன்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, மத்திய தொகுப்பில் இருந்து தென்மாநிலங்களுக்கு வழங்கும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைபட்டதால் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சமாளிக்க மின்சார வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்ததோடு, தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

அமைச்சர் இந்த விளக்கத்தை கொடுத்திருந்தாலும் எதிர்கட்சிகளும், நெட்டிசன்களும் திமுக அரசை விட்டபாடில்லை. டுவிட்டரில் #Powercut_dmk என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், விடியல் ஆட்சி என்று தம்பட்டம் அடித்த திமுக அரசு, மக்களை இருளில் தள்ளி ஆட்சி செய்து வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 701

0

0