போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் திடீர் கைது ; இரவு நேரமாகியும் உள்ளிருப்பு போராட்டம் ; செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டு எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
24 November 2023, 8:27 am
Quick Share

சென்னையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, செல்போன் டார்ச்சுகளை ஒளிரச் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பணி நியமனம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி கடந்த மாதம் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு ஆசிரியர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த உறுதியின் பேரில், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அடுத்தடுத்து திரும்பப் பெற்றனர். தொடர்ந்து, அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆசிரியர் சங்கங்கள் கூறி வேதனை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை உடனே பணி வழங்கக் கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். இதனை அடுத்து மாலை அவர்களை விடுவிப்பதாக போலீசார் அறிவித்த நிலையில், தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 200

0

0