‘என்னை அறியாமல் வார்த்தைகள் வந்திடுச்சு… இனி அப்படி நடக்காது’ ; சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன்!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 2:30 pm

சென்னை ; மாற்றுத்திறனாளிகள் குறித்து தனது சர்ச்சை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் எத்தனையோ திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு திருமண ஆசை இருக்காதா..? நான் என்ன நொண்டியா..? முடமா என்று பேசியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த ஜுன் 30ம் தேதியன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும்
மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.

என்னைப்பற்றி தனிப்பட்டமுறையில் அவதூறு பரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும், என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!