அதிமுக, பாமகவை பயன்படுத்தி இந்த மண்ணில் வேரூன்ற பாஜக முயற்சி… திருமாவளவன் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 3:51 pm
Quick Share

அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து நேர்ந்துள்ளதால், ஜனநாயக சக்திகள் சிதறி போகாமல் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார்விடுதியில் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாநிலங்களில் எதிர்வரும் தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொது செயலாளருமான எஸ் எஸ் பாலாஜி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 74 ஆண்டுகள் ஆகியும் சமூகத்தில் இன்னும் பாகுபாடுகள் நீடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு நேர் எதிரானவர்கள் ஆட்சி பீடத்தில் கோளாச்சுவது வேதனைக்குரியது என கூறினார்.

எனவே, ஜனநாயக சக்திகள் சிதறி போகாமல் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக, பாமகவை பயன்படுத்தி பாஜக இந்த மண்ணில் வேரூன்ற நினைப்பதாகவும், அதன் தலைவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக அந்த இயக்கத்தையே அடமானம் வைத்து பாஜக வளர துணை போகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Views: - 309

0

0