தஞ்சை தேர் விபத்து எதிரொலி… கோவில் திருவிழாக்களில் கட்டுப்பாடு…? வைகோ கருத்தால் சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
28 April 2022, 7:28 pm
Quick Share

11 பேர் பலி

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி திருமடத்தின் தேர் திருவிழாவின்போது தேர் மீது உயர் மின் அழுத்த கம்பியின் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானதும் 15-க்கும் மேற்பட்டோர், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

இந்த துயர நிகழ்வுக்கு கூறப்படும் காரணங்கள்:

  • ஏற்கனவே தேரோட்டம் நடத்தி, அதில் அனுபவம் பெற்றவர்களை வைத்து தேர் இழுக்கப்படவில்லை.
  • தேர் செல்லும் பாதைகளில் குறைந்த மின் அழுத்தம் செல்லும் பாதையில் மின் ஓட்டத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால், உயர் மின் அழுத்த மின்சாரத்தை நிறுத்தவில்லை.
  • பழைய சாலையை பெயர்க்காமல், புதிய ரோடு போடப்பட்டதால், வழக்கம்போல் பழைய ரோட்டின் உயர கணக்கின்படி, அலங்கார அமைப்பின் உயரத்தை அமைத்து விட்டனர்.

இப்படி தேர் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இனி இதுபோல் எங்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் முத்தரசன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் சமூக அக்கறையுடன் பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு கூறியுள்ளனர்.

வைகோ கருத்து

இதில் வைகோ வெளியிட்ட அறிக்கையில் மட்டும் சில மாறுபட்ட கருத்துகள் இருப்பதை காண முடிகிறது.

அவர் கூறும்போது, “அண்மையில் மதுரை நகரில் நடந்த கள்ளழகர் திருவிழாவில், பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் இறந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள், பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. தவிர மதுரை தேர்த் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள்நெருக்கியடித்துக் கொண்டு, வடம் பிடித்து இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்திற்குப் பிறகு நடக்கின்ற இத்தகைய திருவிழாக்களில், கொரோனா கட்டுப்பாடுகள் எதனையும் மக்கள் பின்பற்றவில்லை. 

Vaiko Condemned -Updatenews360

ஏற்கனவே பல ஊர்களில் தேர்கள் சரிந்து பலர் இறந்திருக்கிறார்கள், பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். தாஜ்மகாலைப் பார்க்க, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் வரையிலும் வந்து கொண்டு இருந்தனர். எனவே, உத்தரப் பிரதேச அரசு, இணைய வழி முன்பதிவை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர்தான்பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதுபோல, காலத்திற்கு ஏற்ப, ஒரு இடத்தில் இவ்வளவு பேர்தான் கூடலாம் என்பதைக் கணக்கிட்டு, திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு உச்சவரம்பு வரையறை வகுக்க வேண்டும். தேர்களின் மரச்சக்கரங்கள் பழுது அடைந்த காரணத்தால், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான தேர்களுக்கு, திருச்சி பெல் நிறுவனத்தார் இரும்புச் சக்கரங்கள் ஆக்கித் தந்தார்கள். அதுபோல, இனி தேர்களை ஆட்கள் இழுப்பதற்குப் பதிலாக, இழுவைப் பொறிகளைக் கொண்டு இழுத்துச் செல்வதற்கு, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொந்தளிப்பு

வைகோ தெரிவித்த சில யோசனைகள் விவாதத்துக்குரிய விஷயமாகவும் மாறியிருக்கிறது. இது குறித்து பேசும்போது சமூக ஆர்வலர்கள், கொந்தளித்தனர்.

“வைகோ காட்டும் உதாரணங்கள், ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. தாஜ்மஹாலை பார்ப்பதற்கு, உத்தரபிரதேச அரசு தினமும் 40 ஆயிரம் பேரை அனுமதிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

tajmahal- updatenews360

அது தனிப்பட்ட இடத்தில் உள்ள உலகப் புகழ்பெற்றதொரு சுற்றுலா மையம். 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நேரம் தவிர யாரும் அதனுள் செல்ல முடியாது. ஆனால் ஊருக்குள் இருக்கும் பிரபல ஆன்மீகத் ஸ்தலங்களில் அத்தகைய கட்டுப்பாட்டை திருவிழாக்களின்போது, பின்பற்றுவது எளிதான காரியம் அல்ல.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் தேர்த்திருவிழாவின் போது, இவ்வளவு பக்தர்கள்தான் இருக்க வேண்டும் என்று உச்சவரம்பு விதிக்கும்படி வைகோ கூறுவதும் ஏற்புடையது அல்ல. அதுவும் தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியாக இருக்கும் நிலையில் அவருடைய ஆலோசனை இல்லாத ஊருக்குப் போகாத வழியை சொல்லுவது போல உள்ளது.

ஆன்மீக நம்பிக்கைகளுக்கு தடையா..?

ஏனென்றால் திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகூர் போன்ற நூற்றுக்கணக்கான இடங்களுக்கு அதிகமானோர் செல்லவேண்டும் என்பதற்காக
விசேஷ நாட்களில் மாநில அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அதன்மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் நிறைய அந்த ஊர்களில் கடை வைத்து நடத்துபவர்களின் வாழ்க்கையும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைகிறது.

Cbe Car Festival Cover - updatenews360

எனவே தேர்த்திருவிழாவின்போது, பக்தர்கள் பெருமளவில் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வைகோ சொல்வது சரியல்ல. அது இந்துக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு தடை போடுவது போலாகிவிடும்.

மாறாக தேரோட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது, மின் இணைப்பைத் துண்டிப்பது, சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதே கோவில் நிர்வாகமும், பக்தர்களும் அரசிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்களாகும்.

அதேநேரம் தேர் என்றால், குறிப்பிட்ட அடி உயரத்துக்குள் தான் இனி அமைக்க வேண்டும். அதில் அலங்காரமும் குறிப்பிட்ட அடி உயரத்துக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது போன்ற நிலையான உத்தரவுகளை அரசு பிறப்பிப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல தேரை பராமரிப்பதும், நல்ல நிலையில் வைத்திருப்பதும் அவசியம் என்பதில் கோவில் நிர்வாகிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதில் கண்டிப்புடன் நடந்து கொள்வதிலும் தவறும் கிடையாது” என்று அவர்கள், அரசுக்கு ஆலோசனை கூறினர்.

Views: - 726

0

0