ஆப்கன் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை..!!

Author: Rajesh
17 April 2022, 2:21 pm
Quick Share

காபூல்: எல்லை பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 2 ஆயிரத்து 700 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்கின்றன. இருநாட்டு எல்லைப்பகுதியில் தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத அமைப்புகள் இருநாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்தவாறு தங்கள் நாட்டில் தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில், 6க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணம் ஷெல்டன் மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Views: - 1259

0

0