கோவை வார்டுகளை கொத்தாக அள்ளிய திமுக.. : ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத கட்சிகள்…!!!

Author: Babu Lakshmanan
23 February 2022, 10:23 am

கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது.

போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்த வார்டான 92 வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவை மாநகராட்சி 97 வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் பெண்ணான திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி 7786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் நிவேதா சேனாதிபதி இருப்பதும், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சேனாதிபதியின் மகளான நிவேதா, பஞ்சாப்பில் எம். ஏ. சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல மேயர் பதவிக்கான போட்டியில் உள்ள முன்னாள் கவுன்சிலரான இலக்குமி இளஞ்செல்வியும் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி தோல்வியை சந்தித்துள்ளது. 38வது வார்டில் போட்டியிட்ட அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை இணைச்செயலாளர் ஷர்மிளா சந்திரசேகர் முதல் வெற்றியை அதிமுகவிற்கு பெற்று தந்தார்.

இதேபோல 47வது வார்டில் பிரபாகரனும், 90வது வார்டில் ரமேஷ் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற அதிமுக, எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது.

கோவை மாநகராட்சியில் பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2011 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2 வார்டுகளை வென்ற பாஜக, இம்முறை ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!