அந்தப் பழக்கமே பாஜகவுக்கு இல்லை… இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக : நயினார் நாகேந்திரன் பளீச் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 5:52 pm

தமிழகத்தில் பாஜக இந்தியை திணிக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மத்திய அரசின் கரிப் கல்யான் அண்ணா யோஜனா திட்டத்தை இன்று பா.ஜ.க. எம் .எல். ஏ. நயினார் நாகேந்திரன் வரகனேரி பகுதியில் ரேஷன் கடையை ஆய்வு செய்த பின்னர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ராஜசேகர், கொச்சின் நிர்வாகிகள் இல.கண்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறியதாவது :- மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகத்திற்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5கிலோ அரிசி கோதுமை வழங்கப்பட உள்ளது. அந்தத் திட்டத்தை இன்று திருச்சியில் தொடங்கி வைத்திருக்கிறோம்.

மத்திய அரசு எப்பொழுதுமே ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டுவருவதே நோக்கமாக வைத்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரக்கூடிய திட்டம் தமிழக மக்களின் நலனுக்காக கட்டாயம் இருக்கும். சட்டசபையில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு பல்வேறு காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி இல்லை. எங்களின் கட்சி எப்பொழுதுமே ஹிந்தி மொழியை திணிப்பதை வழக்கமாக வைத்ததில்லை. விருப்பமிருந்தால் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம். ஆளும் கட்சியானது மத்திய அரசு பற்றி அவதூறு பரப்பி வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!