வடிவேலு காமெடி போல.. ‘குளத்தை காணவில்லை’ என பதறிய மக்கள்… ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
2 May 2022, 6:30 pm

திருவாரூர் : வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்தில் குளத்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரே கையொப்பமிட்டு சான்றும் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சந்திரசேகரபுரம் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஆறு குளங்கள் மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

6 குளங்களில் ஒரு குளம் இருந்த இடம் தெரியாமல் தற்போது வாழைத்தோப்பு ஆக மாறி உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும், அந்த புகார் நிராகரிக்கப்பட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகரபுரம் கிராம மக்கள் திடீரென வலங்கைமான் பகுதி முழுவதும் குளத்தை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.

இதுகுறித்து சந்திரசேகரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது :- இந்த கிராமத்தில் உள்ள பழமையான அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு எதிரே இருந்த குளம் காணாமல் போய் விட்டது.

இக்கிராமத்தில் ஊராட்சி கட்டுபாட்டில் ஏழு குளங்கள் இருந்ததற்கான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கும் நிலையில், அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு எதிரே இருந்த குளம், தற்போது வாழைத்தோப்பு மாற்றப்பட்டுள்ளது.

குளம் உள்ளிட்ட விவசாய நிலப்பரப்பை இதே கிராமத்தைச் சேர்ந்த பருவதம்மாள் என்பவர் நிர்வகித்து வந்த நிலையில், அங்கிருந்த குளம் இருந்த சுவடு தெரியாமல் தோப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாயமான குளத்தை கண்டுபிடித்து தரவேண்டும். மீண்டும் குலம் இருந்த பகுதியில் தூர்வாரி மீண்டும் குலத்தை உருவாக்க வேண்டும், என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?