குடிபோதையில் இளைஞரை தாக்கி நகையை பறித்த கும்பல் : வெளியாகிய அதிர்ச்சி வீடியோ… போதை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
9 May 2022, 5:08 pm

இளைஞர் ஒருவரை குடிபோதையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி செயின் பறித்த சம்பவம் வேலூர் அருகே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கண்டிப்பேடு அடுத்த ஒட்டந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (29). இவர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் பொருட்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடையின் முன்பு ஐந்து பேர் மது அருந்தி கொண்டிருப்பதாக தகவல் வந்ததால், கோவிந்தன் அங்கு சென்று பார்த்தபோது, அந்த கும்பலுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுபோதையில் இருந்த அந்த ஐந்து இளைஞர்கள் கோவிந்தனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். குடிபோதையில் இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த கோவிந்தனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் வீடு திரும்பி விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!