சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.. சாட்டையை சுழற்றும் அமலாக்கத்துறை..!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 12:49 pm
Quick Share

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002-2006ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

அதேவேளையில், சட்டவிரோத பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையும் மறுமுனையில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அவரிடமும், அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், சொத்துக்களை முடக்கியது குறித்து எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அந்த வழக்கு இரண்டு வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 9-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்ததுடன், அதுவரை அமலாக்கப்பிரிவு விசாரிக்க விதித்த தடையை நீட்டிக்க முடியாது என்றும், அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை மீண்டும் கையில் எடுக்க உள்ளது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 565

1

0