‘அதுவும் அவங்க ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம்’… மேடையில் திமுக பெண் நிர்வாகியிடம் சாதியை கேட்ட அமைச்சரால் சர்ச்சை : வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
19 September 2022, 8:26 pm

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டு, நியாய விலை கட்டடத்தைத் திறந்து வைத்து, விழா மேடையில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஒரு காலத்தில் பெண்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டார்கள். அப்போதெல்லாம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலை இருந்தது.

இதையடுத்து, ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்தி வருகிறது.
திமுக ஆட்சியில் தற்போது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக, முகையூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார் என்று பேசிய அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் முன்னிலையில் திடீரென மேடையில் இருந்த அந்த ஒன்றியக் குழுத் தலைவரை பார்த்து, ஏம்மா நீ எஸ்.சி., தானே என்று வெளிப்படையாக கேட்டபோது, அதற்கு அவரும் எழுந்து நின்று ஆமாம் என்று சொன்னது, மேடையில் இருந்தவர்கள் மத்தியிலும், எதிர் திசையில் அமர்ந்திருந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அங்கு சற்று நேரம் சலசலப்பையும் உருவாக்கியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடையில் பொருள்கள் வழங்க மாட்டோம் எனக் கூறிய கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு விழாவில் அமைச்சர் இப்படி அத்துமீறிய சம்பவம், மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…