ஜி.பி. முத்துவுக்கு பைக்கில் மரண பயத்தை காட்டிய TTF வாசன்… 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
24 September 2022, 2:05 pm
Quick Share

கோவை : போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார்.

அப்போது, ரைடுக்கு கிளம்பும் முன் வாசனின் பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே என தெரிவிக்க, என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என டி.டி எஃப் வாசன் கூறுகிறார். பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பியதாக தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து 20 கி.மீ. தூரத்தை பைக்கில் செல்ல முடிவு செய்கின்றனர்.

டி.டி.எஃப்.வாசன் பைக்கில் ஏற முடியாமல் ஏறும் ஜி.பி.முத்து தனக்கு வேகமாக போக பிடிக்காது என தெரிவிக்கிறார். ஆனால் அதைக் கேட்காமல் வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎஃப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார்.

இதனால் கதறுவதை காமெடியாக டிடிஎஃப் வாசன் எடுத்துக் கொள்கிறார். எதிர்திசையில் வாகனங்கள் வரும் நிலையில் கையை விட்டு வேகமாக ஓட்டும் நிலையில் ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து இருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இப்படி சாலை விதிகளை மீறும் டிடிஎஃப் வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

டிடிஎஃப் வாசன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை – பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கி அவருக்கு பயத்தை காட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியில் பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பின் இருக்கையில் அமரும் நபர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 409

0

0