மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலி ; மருத்துவமனையில் பதற்றம்… போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
21 November 2022, 11:44 am
Quick Share

கடலூர் ; கடலூரில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மூக்கு சதை அறுவை சிகிச்சை செய்வதற்காக கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பதில் உள்ள பாஷியம் ரெட்டி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு முன்பாக அளிக்கப்படும் மயக்க மருந்தை, கோவிந்தராஜுக்கு மருத்துவர்கள் செலுத்தினர்.

அப்போது, திடீரென அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், அதிர்ந்து போன குடும்பத்தினர், கோவிந்தராஜை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கோவிந்தராஜின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும், தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே, பண்ருட்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பெண்ணின் கைவிரல் அழுகியதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், கடலூரில் இளைஞர் ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மருத்துவமனையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 380

0

0