கோவிலில் கொள்ளையடிக்க சதித் திட்டம்… அலர்ட்டான பூசாரி ; பயங்கர ஆயுதங்களுடன் உலா வந்த 7 பேரை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 8:37 pm

திருப்பூர் ; பல்லடம் அருகே கையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயற்சித்தவர்களை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூர் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்(60). அங்கு குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் திருப்பூர் – பல்லடம் சாலையில் உள்ள ராயர்பாளையம் அருள்மிகு விநாயகர் கோவிலில், இருவேளையும் பூஜை செய்து வருகின்றார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இரவு பூஜை முடித்து நேரமானதால் அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அதிகாலை 3 மணிக்கு தூக்கம் விழித்து எழுந்து பார்த்தபோது, கோவில் அருகே பேச்சுகுரல் கேட்டுள்ளது.

அங்கு சென்று இருட்டில் மறைந்து பார்த்தபோது, கோவிலின் முன்பக்க விளக்கு வெளிச்சத்தில் ஏழு நபர்கள் கையில் அரிவாள் கத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு, தங்களுக்குள் இந்த கோவிலில் கொள்ளை அடித்துவிட்டு பின்னர் கணபதிபாளையம் பகுதியில் ஏற்கனவே பார்த்து வைத்துள்ள வீட்டில் கொள்ளை அடித்து அனைவரும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என பேசியதை கேட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பூசாரி தனது மகனுக்கு போன் செய்து சில ஆட்களுடன் கோவிலுக்கு வருமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, அவரது மகன் சில நண்பர்களுடன் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களை அழைத்துக்கொண்டு வந்து அங்கு பேசி கொண்டிருந்த 7 நபர்களை மடக்கி பிடித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் தேனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மோகன் குமார், வீரமணி,வினோத் குமார், விஜய், ரஞ்சித், ரமேஷ் குமார் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.

பின்னர், அவர்களை கைது செய்த பல்லடம் காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். கோவிலில் கொள்ளை அடிக்க முயன்ற நபர்களை பூசாரி, தனது மகன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தைரியமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?