பரோட்டா சாப்பிட்டு விட்டு ஜுஸ் குடித்ததால் விபரீதம் : 27 வயது வாலிபர் திடீர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 4:59 pm
Quick Share

சென்னை : வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்டு படுத்து உறங்கிய 27 வயது வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் (27). இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று இரவு 10 மணி அளவில் வியாசர்பாடி பகுதியில் உள்ள சாலையோர ரோட்டு கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கினர். இரவு 11 மணி அளவில் கார்த்திக்கு மட்டும் குமட்டல் மற்றும் வாந்தி வந்துள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறி, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்கின் உறவினர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே கார்த்திக் மயக்கம் அடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர், நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டு விட்டுஇ அதன் பிறகு கார்த்திக் பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் ஜூஸ் ஒன்றை குடித்துள்ளார், அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை,

இந்நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கிய நிலையில், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் கார்த்திக் மட்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கார்த்திக் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Views: - 410

0

0