தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா நாம் தமிழர் வேட்பாளர்..? சீமானின் சர்ச்சை பேச்சால் எழுந்த சிக்கல்… தேர்தல் அதிகாரி வைத்த செக்..!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 1:23 pm
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 13ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகாவை ஆதரித்து சீமான் சாதிய அடிப்படையில் வாக்கு சேகரித்தார்.

அவர் பேசியதாவது :- முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார். சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர், எனக் கூறினார்.

மேலும், இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாகவும், அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, ‘போடா வேற ஆளை பாரு’! என்றதாகவும், வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கியதாகவும், அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என சீமான் பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அருந்ததியர்- தெலுங்கு வந்தேறிகள் என்ற சீமானின் பேச்சு கடுமையான விவாதங்களை எழச் செய்துள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் அருந்ததியர் இன மக்கள் வாழும் பகுதியில், வாக்குசேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை அப்பகுதியினர் விரட்டியடித்தனர். அதோடு, அந்தப் பகுதியில் இருந்த அக்கட்சியின் கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில், சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 583

1

0